சினம்

கோபப்படுவதை விட கோபத்தை அடக்குவதால் ஏற்படும் உடல், மனத் தொந்தரவுகள் அதிகம். அதை விட கோபப்பட்டு விடுவதே எவ்வளவோ மேல். அதற்காக எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு விடாதீர்கள். அதாவது கோபத்தை அடக்குவதால் அதிகத் தீமை ஏற்படும் என்பதை உணர்த்தவே அவ்வாறுகூறினேன். இயல்பாகவே கோபம் எழாத வகையில் நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது சினம் உள்ளத்தில் எழாதபடி பழகிடுதல் வேண்டும். சினம் எழும் பொழுதெல்லாம் உள்ளத்தின் தயை எனும் நீரால் அதை அணைத்திடுதல் வேண்டும். இது ஒரு பழக்கம்தான். பழக்கம் அழுத்தமடையும் பொழுது அது இயல்பாக ஆகி விடும். மேலும், கோபம் வராமலிருக்க உணவில் உப்பு, காரம் குறைத்துக் கொள்ளுவது ஒரு உபாயமாக நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

புத்தர் ஒரு நாள் வீடு வாடாகப் போய் பிக்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது உபதேசங்களோடு முரண்பாடு கொண்ட ஒருவன் அவரைத் தகாத முறையில் பேசினான். அவன் ஏசிக் கொண்டேயிருந்தானேயொழிய, புத்தர் காதே கேட்காதது போல அமைதியாகச் சென்று கொண்டிருந்தார். அவரது இந்தச் செயல் திட்டியவனுக்கு எரிச்சலாக இருந்தது. எனவே அவன் புத்தரிடம் ''நான் இவ்வளவு திட்டுகிறேன் உனக்கு கொஞ்சம் கூட வெக்கம், மானம், சூடு, சுரணை இல்லையா? " என்று கேட்டான். புத்தர் அவனை நோக்கி, "அன்பரே ஒருவர் நமக்கு ஏதாவது தரவேண்டும் என்று எண்ணி தரும்பொழுது, நாம் வாங்க மறுத்தால் அந்தப் பொருள் யாருடையாதாக இருக்கும் ?" என்று கேட்டார்.

அவன் சொன்னான் " அது கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தமாக இருக்கும் !! இதற்கும் நான் ஏசியதற்கு நீர் மறுமொழி பேசாமலிருப்பதற்கும் என்ன சம்மந்தம்'' என்று இளக்காரமாகக் கேட்டான். புத்தர் சொன்னார் "நண்பரே நானும் அதைப் போலவே தாங்கள் பேசிய வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதலால் அவையனைத்தும் தங்களுக்கே சொந்தம்." என்று சொல்லி விட்டு நகர்ந்தார். அந்த மனிதனோ செயலிழந்து போனான். 


எனவே மற்றவர்கள் தரும் பொருட்களாக இருந்தாலும் சரி, பாராட்டுகளாக இருந்தாலும் சரி, வசவுகளாக இருந்தாலும் சரி, அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்த முடியாது.அத்தகைய கருத்துகளுக்கு நின்று அவர்களுக்கு நேருக்கு நேர் பதில் சொல்லத்தான் வேண்டும் என்பதில்லை.

எதையும் ஏற்பதும், ஏற்காமல் விட்டு விடுவதும் நம் செயல்தான். ஆனால் நடப்பதென்ன ? மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் ? என்ன நினைக்கிறார்கள் ? என்ற கவலையும், ஆர்வமும்தான் நம்மிடம் அதிகமாக இருக்கிறது. இதன் விளைவு ஏமாற்றம், கோபம். இந்த சுபாவத்தால் நாம் மற்றவர்களுக்கு அடிமையாக ஆகி விடுகிறோம். அவர்கள் நினைத்தது நடந்து விடுகிறது. அதுவே நமக்கு பொறுமை என்கிற இயல்பு இருந்தால், அவர்கள் நம்மிடம் தோற்றுப் போவார்கள். எனவே பொறுமையாக இருக்கப் பழகிக் கொள்வது ஒன்றே சினத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி. இதனால் தேவையிற்ற வீண் விவாதங்கள், சண்டை, சச்சரவுகளைத் தவிர்த்துக் கொள்வதோடு, நம் மன அமைதியையும் நாம் பாதுகாத்து, வளர்த்துக் கொள்ளலாம்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
.

என்று சொல்வார் வள்ளுவர். 


சினம் தவிர்க்கப்படாமல் மனதில் நிலைத்து விட்டால், அது வஞ்சமாக மாறி உடையவனையே கொல்லும் விஷமாக மாறி விடும்.

Comments

Popular posts from this blog

அறம், பொருள், இன்பம், வீடு

பிரபஞ்சம் உருவானது எப்படி?

ஆழ்மன தியானம்